உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Saturday 22 February 2014

நம் முன்னோர்கள் மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் இருப்பதாகக் கருதினார்கள்.



   நம் முன்னோர்கள் மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் இருப்பதாகக் கருதினார்கள். அந்த சக்தி மையங்களை “சக்ரா” என்றழைத்தார்கள். அந்த சக்தி மையங்கள் இருப்பதாக சீனா, திபெத் போன்ற நாட்டு முன்னோர்களும் நம்பி வந்தனர். இந்த “சக்ரா”க்களின் தன்மையைப் பொறுத்தே மனிதர்களின் தன்மையும், ஆற்றலும், அறிவும் அமைகிறதாக அவர்கள் நம்பினார்கள். ஒவ்வொரு சக்ராவும் புறக்கண்ணால் காண முடியாததாக இருந்தாலும் சூட்சும சரீரத்தில் இருக்கும் சக்தி மையங்களாக அவர்கள் அவற்றைக் கண்டதோடு அந்த சக்ராக்களுக்குத் தனித்தனியாக சின்னங்களும், நிறங்களும், மந்திர சப்தங்களும் ஒதுக்கி இருந்தார்கள். ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை கொண்டதாகவும், சில குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாகவும், அந்த சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாகவும் கருதப்பட்டது. குண்டலினி சக்தியும் இந்த சக்ராக்களின் வழியாகத் தான் மேலே எழுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல மேலை நாட்டு அறிஞர்களும் இந்த சக்ராக்களில் காட்டிய ஈடுபாடும், ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சக்ராக்களைப் பயன்படுத்தியதும், தியான முறைகளில் பயன்படுத்தியதும் உலகளவில் இந்த சக்ரா முறைகளைப் பிரபலப்படுத்தின.
இனி ஏழு சக்ராக்களையும் அறிந்து கொள்வோம்.
1) மூலாதார சக்ரா –

இது மனித உடலில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே உடல் வலிமைக்கு ஆணிவேராக இந்த சக்ரா விளங்குகிறது. அமைப்பில் நான்கு இதழ் தாமரையுடன் உள்ள இதன் நிறம் சிவப்பு. இது ”லா” என்ற சத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது லாம், லாங் என்ற இரு உச்சரிப்புகளுக்கு இடையே உச்சரிக்கப்படுகிறது. அதாவது லா என்கிற ஒலி பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு முக்கியம்.
2) ஸ்வாதிஷ்டானா சக்ரா

இது மனித உடலில் ஆண்/பெண் குறி பாகத்தில், இன விருத்தி உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ளது. இது ஆறு இதழ் தாமரை அமைப்பில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. இது வா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது வாம்/வாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது வா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு சரியாக இருப்பது முக்கியம்.
3) மணிபுரா சக்ரா

இது மனித உடலில் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இது பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. இது ரா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ராம்/ராங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ரா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. ஜீரணம், செயலாற்றத் தேவையான சக்தி, எண்ணங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.
4) அனாஹதா சக்ரா

இது மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் உருவகப்படுத்தப்படுகிறது. இது யா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது யாம்/யாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது யா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இதயமும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளும் இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.
5) விசுத்தா அல்லது விசுத்தி சக்ரா

இது மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது இது பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. இது ஹா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ஹாம்/ஹாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ஹா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்தி பெறுகிறது. தைராய்டு சுரப்பியும், பேச்சுத் திறனும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியும் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகின்றன.
6) ஆஜனா சக்ரா

இது இரு புருவங்களுக்கிடையில் பொட்டு வைக்கும் நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது. இதை நெற்றிக் கண் சக்ரா என்றும் அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்துள்ளது. இது ஓம் என்ற மந்திர சப்தத்தில் சக்தி பெறுகிறது. ஆங்கிலத்தில் aum என்று உச்சரிப்பிற்கிணையாக இந்த ஓம் இருக்கிறது. கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை இந்தச் சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.
7) சஹஸ்ரரா சக்ரா

இது தலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இந்த சக்ரா அமைந்துள்ளது. இது ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து ஓம் (aum) என்று முடியும் படியான மந்திர உச்சரிப்பில் பலம் பெறுகிறது. ஆத்ம ஞானம், தெய்வீக சக்திகள் போன்றவை கைகூடுவது இந்த சக்ராவின் குறையற்ற செயல்பாட்டாலேயே.
இந்த ஏழு சக்ராவின் சின்னங்களையும், மந்திர சப்தங்களையும் கூடுமான வரை மனதில் இருத்துங்கள்.

        
திபெத்திய தியானம்
இந்திய யோகிகளைப் போலவே திபெத்திய லாமாக்களும் தியான முறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை தியானம் என்பது மனிதன் தன் உண்மையான தன்மையைக் கண்டுணர்வது தான். அப்படிக் கண்டுணர்ந்த பின் மகத்தான அற்புதங்களை மனிதன் நிகழ்த்திக் காட்ட முடியும் என்றாலும் அதெல்லாம் உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருந்தது.
புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவைப் பின்பற்றி வந்த அவர்கள் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய அமைதியையும், தெளிந்த அறிவையும் பெற்றிருத்தல் அவசியம் என்று கருதினார்கள். எண்ணங்கள் பெரும்பாலும் அந்த இரண்டையும் இருட்டடிப்பு செய்து விடுவதால் தியானம் மூலம் எண்ணங்களை நீக்கி அமைதியையும், அறிவுத் தெளிவையும் பெற்று உண்மையை அறிய வலியுறுத்தினார்கள். அப்படி மனிதன் தன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டால் பின் அவன் எல்லையற்ற ஆனந்தத்தையும் நன்மையையும் தன் இயல்பென உணர்ந்து மெய்ஞானம் பெறுவான் என்று நம்பினார்கள்.
தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற திபெத்திய லாமாக்கள் தோற்றத்தில் இளமையாக இருப்பதையும், சுபாவத்தில் மாறாத அமைதியுடன் இருப்பதையும், பல சக்திகளைப் பெற்றிருந்ததையும் அங்கு சென்று அவர்களைக் கண்ட வெளிநாட்டினர் பலரும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அப்படி ஆவது இயல்பே. இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.
தியானம் செய்யப் பொதுவாக அதிகாலை நேரம் சிறந்ததாக திபெத்திய லாமாக்கள் கருதுகிறார்கள். அல்லது எழுச்சியூட்டும் மனநிலையுள்ள சமயங்களும், ஆர்வமுள்ள நேரங்களும் தியானத்திற்கு உகந்தது என்கிறார்கள். கவலையோ, வேறு பிரச்னைகளோ உள்ள சமயங்களில் தியானம் கைகூடாது என்பதால் அதை சரி செய்து விட்டு அல்லது அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டு தியானத்தில் அமரச் சொல்கிறார்கள்.
1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கைகளைத் திறந்த நிலையில் இடது கையின் மேலே வலது கை இருக்குமாறு அடிவயிற்றருகே (தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழே) வைத்துக் கொள்ளுங்கள். இரு கைகளின் கட்டைவிரல்கள் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டு ஒரு முக்கோணத்தை உண்டாக்கும்படி முத்திரையை உருவாக்குங்கள்.
2) கழுத்தை லேசாகக் கீழே சாய்க்கவும். உங்கள் நுனி நாக்கு வாயினுள் மேல் பற்களின் வேர் பாகத்தைத் தொட்டபடி இருக்கட்டும். கண்களை தாழ்த்தி உங்களுக்கு முன்னால் உள்ள தரையைப் பார்த்தபடி பார்வையை நிறுத்துங்கள். (கிட்டத்தட்ட பாதி கண்கள் மூடியது போல் இருக்கும்). இயல்பாக மூச்சு விடுங்கள். உங்கள் கவனம் மூச்சில் இருக்கட்டும்.
3) ஓரளவு மனம் அமைதியடைந்தவுடன் உங்கள் மனதைக் குவிக்க ஏதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து மனத்திரையில் பாருங்கள். அது ஒரு புனிதப் பொருளாகவோ, உங்களுக்கு உயர்ந்ததாகத் தோன்றும் பொருளாகவோ இருப்பது நல்லது. திபெத்தியர்கள் பெரும்பாலும் புத்தர் சிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது சிலுவையாகவோ, அழகான ஒரு பூவாகவோ, உங்கள் குருவின் உருவமாகவோ, உங்கள் தெய்வச்சிலையாகவோ, ஒரு அழகான விளக்கின் தீப ஒளியாகவோ கூட இருக்கலாம்.
4) இனி உங்கள் முழுக் கவனத்தையும் மூச்சிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளிற்கு மாற்றுங்கள். அந்தப் பொருளை மனக்கண்ணில் இடைவிடாது பார்ப்பதும், மிகத் தெளிவாகப் பார்ப்பதும் தான் உங்கள் நோக்கம்.
5) மனத்திரையில் அப்படித் தெளிவாகப் பார்ப்பது கண்களைப் பாதி திறந்த நிலையில் உள்ள போது கஷ்டமாகத் தெரிந்தால் கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் மனக்கண்ணில் தெளிவாகவும், இடைவிடாதும் காண்பது முடியாமல் போய் உறங்கி விடவும் வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க வேண்டும்.
6) கண்களை மூடிய பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளையே முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிவப்போ, கருப்போ நிறங்களை நீங்கள் கண்டால் கண்களை மூடியும் கவனம் புறக்கண்ணிலேயே இன்னமும் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உங்கள் கவனத்தை மேலும் கூர்மையாக்கி, நூறு சதவீத கவனத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பொருள் மீது கொண்டு வாருங்கள்.
7) மனம் வேறு எண்ணங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தால் அதை உணர்ந்தவுடன் மீண்டும் அதை நீங்கள் தியானத்திற்காக தேர்ந்தெடுத்த பொருள் மீதே கொண்டு வாருங்கள். அதைக் கூடுமான அளவு முழுக் கவனத்துடன் பாருங்கள். அதன் சிறப்பு அம்சங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தது புத்தர் சிலை என்றால் அந்தப் புத்தர் முகத்தில் தவழும் அந்த பேரமைதியைக் கவனியுங்கள். அவரது புன்னகையைக் கவனியுங்கள். அவர் அமர்ந்துள்ள நிலையைக் கவனியுங்கள். அவர் விரல்களின் முத்திரையைக் கவனியுங்கள். இப்படி அந்த சிலையைப் புதுப்புது கண்ணோட்டத்துடன் பாருங்கள். பார்ப்பதை சுவாரசியமாக்குங்கள். ஆனந்தமாக்குங்கள். ஒரு நிலையில் புத்தரே உங்கள் முழுக்கவனத்தையும் ஆட்கொள்வார். உங்களையே கூட நீங்கள் மறந்து புத்தரே எல்லாமாகும் போது தியானம் முழுமையாகிறது. அது சில வினாடிகளே நீடிக்கலாம். மறுபடி மனம் தியான நிலையை இழக்கலாம். ஆனால் அந்த வினாடிகள் தியானம் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தி இருக்கும். ஒரு மிகப்பெரிய அனுபவத்தின் முதல் கணத்தை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.
தியானத்தில் மேற்கொண்டு பயணிக்க பயணிக்க அந்த சில வினாடிகள், பல வினாடிகளாகும். நிமிடங்களாகும். உங்கள் கவனம் கூர்மையடையும். தெள்ளத் தெளிவடையும். மனம் அமைதியடையும். சக்தி அடையும். மிக உயர்ந்த சாதனையாளர்கள் அந்த தியான நிலையை தினசரி வாழ்க்கைக்கே கொண்டு வர முடியும். சாதாரண தினசரி செயல்களைக் கூட தியானம் போல் செய்ய முடியும்.
ஒரு ஜென் ஞானி சொல்வார். “நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன். நான் உறங்கும் போது உறங்கும் போது உறங்குகிறேன்”. மேற்போக்காகப் பார்க்கையில் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு சிரமமான விஷயம் என்பது புரியும். சாப்பிடும் போது பல சிந்தனைகளுடன் எந்திரத்தனமாய் சாப்பிடுகிறோம். உறங்கும் போதோ பல கோடி சிந்தனைகள். இப்படி இருக்கையில் அதை அதை செய்யும் போது அதிலேயே நூறு சதவீதம் இருக்க முடியுமானால் அதை விடப் பெரிய வெற்றி உண்டோ?